#நிழல்_மயக்கம் கவிதைத் தொகுப்பு வெளியாகிவிட்டது. 2023இன் இன்னொரு மகிழ்வான தருணம். அன்பும் மகிழ்வும் மக்களே. 😍😍🙏🙏
2024 சென்னை புத்தகக் காட்சியில் சந்தியா பதிப்பக அரங்கில் கிடைக்கும். 🙌
குமுதம், கொன்றை அறக்கட்டளை இணைந்து நடத்திய சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் ரூ.10000/- பரிசு பெற்ற கதை இந்த வார இதழில். உங்களோடு பகிர்வதில் அளவற்ற மகிழ்ச்சி 🙏 🙏
எனது மூன்று கவிதைகள் இம்மாத 'ஜீவநதி' சஞ்சிகையில்..அன்பு சகோதரர்
@esumuralee
க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. படித்துத் தங்களது கருத்துக்களைக் கூறுங்கள்.. 🙏 🙏 🙏
எந்தச் சோதிடமும் பார்க்காமலே
நாலரைக் கோடி பில்லியன் ஆண்டுகள்
நலமாக இருக்கிறது
சூரியக் குடும்பம்;
அந்தக் குடும்பத்தையே
சந்திக்கு இழுத்துச்
சோதிடம் பார்க்கிறோம்
நாம்.
ஆண் மானும்,
பெண் மானும்,
தன் இணை அருந்தட்டுமென விட்டுவைத்த நீர் வற்றாதிருந்ததென
அன்று அகத்திணை உரைத்தாற்போல்,
அவள் வைக்கட்டும் எனத் தலைவனும்,
அவன் வைக்கட்டும் எனத் தலைவியும் எண்ணி,
நில்லாமல் நீள்கிறது
அலைபேசி உரையாடல்.
நான் இதற்காகத்தான் பிறந்தேன் என்று
அறுதியிட்டுக் கூற முடியாதுதான்;
ஆனாலும்,
இதற்காகவெல்லாம் ஒன்றும்
நான் பிறந்துவிடவில்லை என
வகைப்படுத்திவிட முடியும்தானே?.
அமாவாசை, பிதுர்க்கடன் என்றெல்லாம் சொல்லிக்
கரைந்து அழைக்கும் போதெல்லாம்,
"ஒரு வாய் சோறு
உயிரோடு இருக்கையில் உருப்படியாகப் போடாத நீ
சாவுக்குப் பின் என்னிடம்
தேடுகிறாயே உன் தாயை, தகப்பனை " எனக்
கேலி செய்யாதோ காகங்கள்.
மூங்கிலின் பெரும் பயன் புல்லாங்குழலெனின்,
நீ காற்றேயல்லவா!
நிலவின் குளிரெல்லாம் மண்ணின் பயனெனின்,
நீ கதிரேயல்லவா!
மண்ணின் வாழ்வெல்லாம் நீரின் வளமேனின்,
நீ மழையேயல்லவா!
இயற்கையின் சட்டகத்தில் ஓவியம் கலையெனின்,
நீ வண்ணமேயல்லவா!
வேப்பமரம் வெட்டப்பட்டது
வேரோடினால்
சுவருக்குப் பலமில்லை என்று
மேற்கு மூலையில் மஞ்சளாகப் பூக்கும்
மரம் நட்டாயிற்று
ஏதாவது ஒரு விழா என்று
சீரமைக்கிறார்கள்
வீட்டை
பாட்டியின், அம்மாவின்
இறப்புகளுக்குப் பிறகு
தானாகவே விரிசல் விடுகிறது
வீடு
வேர்கள் காடடைந்ததால்
எனக்காக எப்படியெல்லாம்
இருக்கிறாய் நீ!
என்ற வியப்பிருந்தாலும்,
நான் அப்படியெல்லாம்
இருப்பதில்லை;
அதனாலேயே நம் நாட்கள்
இருக்கின்றன
சலிப்புறாத பசுமையில்.